செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அன்றைய பாஜக அரசுக்கு எதிரான 40 சதவீதம் கமிஷன் என்ற குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இதே விஷயத்தை பயன்படுத்தி பிரச்சாரமும் செய்தனர்.
அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட, பாஜக தலைவர்களுக்கு எதிராக ஊடகங்களில், கரப்ஷன் ரேட் உட்பட பலவிதமான விளம்பரங்களை காங்கிரஸ் வெளியிட்டது. தேர்தல் நேரத்தில் இத்தகைய விளம்பரம் வெளியிட்டதால், தலைமை தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பாஜகவின் கவுரவம் பாதிக்கப்பட்டது, மேலும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெங்களூரு நீதிமன்றத்தில், பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, மார்ச் 28ல் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிபதி ஜே.பிரீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.