ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை மறுநாள் பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார்.
அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நேரத்தில் புவனேஸ்வர், புன் ஜம் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கர காற்றுடன் மழையும் பெய்தது. புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ள பூரி நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது.
காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் பல இடங்களில் குடிசை வீடுகள் முற்றிலும் சிதைந்தன. வீடுகளின் கூரைகள் பறந்தன. ஏராளமான மரங்கள் சாலையெங்கும் விழுந்து கிடக்கின்றன என்றும் மின் கோபுரங்களும் செல்போன் கோபுரங்களும் பல இடங்களில் சாய்ந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நிலையில் ஃபோனி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை மறுநாள் பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார். இதற்காக நாளை மறுநாள் அங்கு செல்ல உள்ளதாக பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தற்போதைய நிலவரம் குறித்தும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் ஒடிசா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய அரசு தொடர்ந்து செய்யும் என்றும் உறுதியளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். துன்பத்தில் சிக்கியுள்ள ஒடிசா மக்களுக்கு ஆதரவாக நாடே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஃபோனி புயல் தாக்குதல் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.