வெளிநாட்டிலிருந்து உடலில் அணிந்து வரும் நகைகளுக்கு சுங்க வரியா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய பெண், 135 கிராம் எடையுள்ள 10 வளையல்களை அணிந்து வந்ததாகக் கூறி, அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல இலங்கையில் இருந்து வந்த பெண், 88 கிராம் தாலிச்சங்கிலி அணிந்திருந்ததாகக் கூறி, அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திரும்பத்தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடமைகளாக கருதி சுங்கவரி விதிக்க முடியாது எனக் கூறி, நகைக்ளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சி.சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, சுங்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும், உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்ற உத்தரவை ஏற்றுக் கொண்டால், அது இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் வகையில் உடைமைகளாக கருத முடியாது’ என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு நிபந்தனையுடன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.