கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. என்ன பாதிப்பு எல்லாம் உருவாகும்..? அதிர்ச்சி தகவல்!
கச்சா எண்ணெய் விலை 115 டாலர்களை எட்டியதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது. 85% எண்ணெய் தேவையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, அதிக விலை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீதான போரை பிப்ரவரி 28 அன்று ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது. முதல் நாளே ஈரான் உச்சபட்ச தலைவர் காமெனி மற்றும் பிற உயர் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட ஈரான், இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவியது. மேலும் அமெரிக்கப் படைகள் நிலைகொண்ட பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் 'தீவைக்கப்படும்' என்று எச்சரித்த பிறகு ஈரான் ஜலசந்தியை மூடியது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கும், இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் பாதிக்கும் மேலாக ஹார்முஸ் ஜலசந்தி வழி பயன்படுத்தப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள பெரிய ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் உட்பட முக்கிய எண்ணெய் வயல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், மேற்கு ஆசியா முழுவதும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயலும் தாக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலர்களை தொட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சமையல் எரிவாயு விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போர் தொடர்ந்தால் அது மேலும்அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 145 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா தனது எண்ணெய் தேவைக்கு 85% வெளிநாடுகளையே சார்ந்துள்ளது.
இதற்கு தற்போது அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பதால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வாகனப்போக்குவரத்து செலவிலிருந்து பொருட்கள் உற்பத்தி செலவு வரை எல்லாமே அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது கடும் விலைவாசி உயர்வுக்கு வித்திடும். கச்சா எண்ணெய்க்காக அதிக டாலரை செலவிட வேண்டும் என்பதால் ஏற்கெனவே குறைந்திருக்கும் ரூபாய் மதிப்பு மேலும் சரியும்.
இதன் காரணமாக தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்படும். தொழிற்துறையும் வணிகமும் முடங்கும் என்பதால் பங்குச்சந்தைகளும் பாதாளத்திற்கு செல்லும். கச்சா எண்ணெய் என்ற ஒரே ஒரு பொருளின் விலை உயர்வு தொடர் விளைவாக சாமனியர்களின் பொருளாதாரத்திலிருந்து மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரம் வரை தாக்கம் ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

