
சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட, சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவர், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவர் மனைவி ரிவபா. குஜராத் மாநில அமைச்சர், ஆர்.சி. ஃபால்டு முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதாவில் இணைந்தார் ரிவபா. கடந்த சில மாதங்களுக்கு முன், ராஜ்புத் சமூகத்தின் பெண்கள் அமைப்பான ‘கர்னிசேனா’ வின் தலைவியாக, ரிவபா நியமிக்கப்பட்டிருந்தார். அந்த சமூகத்தின் ஆதரவோடு அவர் பாஜகவில் சேர்ந்தார்.
கட்சியில் சேர்ந்தது பற்றி ரிவபா, ‘’பிரதமர் மோடிதான் உந்துசக்தி. அதனால்தான் பாஜக-வில் இணைந்தேன். இந்தக் கட்சியில் இணைந்ததன் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என நினைக்கிறேன். என் முதல் இலக்கு பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பது தான்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட அவர் முயற்சி செய்து வருகிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே பூனம் மாடம் பாஜக எம்.பி யாக இருக்கிறார். அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தனக்கு சீட் வேண்டும் என்று ரிவபா கேட்டு வருகிறார்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில், பட்டேல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் ஹர்திக் படேல் போட்டியிட இருக்கிறார்.