யாருக்கு சொந்தம்? - நீதிமன்றத்திற்கு வந்த பசுமாடு
ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் உள்ளூர் நீதிமன்றத்தில் பசு ஒன்று ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு பசு வதையை தடை செய்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம் எனத் தீர்ப்பு ஒன்று வழங்கியது. அது பரவலாக அனைத்து மட்டங்களிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது மீண்டும் பசு ஒன்று ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் போலீஸ் அதிகாரி ஓம் பிரகாஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஷயாம் சிங் என்பவருக்கும் பசுவை உரிமை கொண்டாடுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் மாண்டோர் (Mandore) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரால் இந்த வழக்கை முடித்துவைக்க முடியாததால் இது ஜோத்பூர் மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மதன் சிங் சௌதாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அத்துடன் பசுவும் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டது. மேலும் இந்தப் பசுவின் உடல் அடையாளங்களும் எடுத்து கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.