மருத்துவமனை வாசலில் உயிர்விட்ட கொரோனா நோயாளி.. மருத்துவர்கள் அலட்சியத்தால் நடந்ததாக புகார்
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த பவன் குப்தா (60) என்பவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு பவன் குப்தாவை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்காமல் வாசலில் நீண்டநேரம் காக்க வைத்து தாமதத்திதாக கூறப்படுகிறது. அப்போது பவன் குப்தாவுக்கு திடீரென அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த சமயத்திலும் கூட மருத்துவமனை நிர்வாகம் நோயாளியை அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பவன் குப்தாவின் உயிர் மருத்துவமனை வாசலிலேயே பிரிந்தது.
இச்சம்பவம் நடந்த வேளையில் ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, சதர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது வெளியேவந்த அமைச்சர் பன்னா குப்தாவிடம் உயிரிழந்த நோயாளியின் மகள் கதறி அழுதபடி முறையிட்டார். ‘’நாங்கள் அரை மணி நேரமாக டாக்டர்களை அழைத்துக் கொண்டிருக்கிறோம். யாருமே உதவிக்கு வரவில்லை. எனது தந்தைக்கு எந்த மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை. அதன் காரணமாகவே எனது தந்தை இறந்துவிட்டார். ஓட்டுக்காக மட்டும் நீங்கள் வருகிறீர்கள்’’ என்றார்.