இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. சில மாநிலங்களில் வேகமெடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி 3,038 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், மறுநாள் 4,435 ஆகவும், நேற்று 5,335 ஆகவும் உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. கடைசியாக செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு 6,298 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 803 பேரும், குஜராத்தில் 327 பேரும், டெல்லியில் 606 பேரும், இமாச்சலபிரதேசத்தில் 367 பேரும், கர்நாடகாவில் 323 பேரும், தமிழகத்தில் 273 பேரும், அரியானாவில் 318 பேரும், உத்தரபிரதேசத்தில் 192 பேரும் ராஜஸ்தானில் 100 பேரும், சத்தீஸ்கரில் 102 பேரும், பஞ்சாப்பில் 111 பேரும், கோவாவில் 162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் மட்டும் 9,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாரஷ்டிராவில் 3,987 பேரும், குஜராத்தில் 2,142 பேரும், டெல்லியில் 2,060 பேரும், இமாச்சலில் 1,933 பேரும், கர்நாடகாவில் 1,516 பேரும், தமிழகத்தில் 1,366 பேரும், ஹரியானாவில் 1,132 பேரும், கோவாவில் 872 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 842 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,45,104 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுப் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், ராஜஸ்தான், கர்நாடகாவில் தலா 2 பேர் மற்றும் பஞ்சாப், டெல்லி, குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என 13 பேர் இறந்துள்ளனர். கொரோனா சோதனைகளில், தினசரி நோய் உறுதி விகிதம் - 3.39% ஆகவும், வாரந்திர நோய் உறுதி விகிதம் 3.02% ஆகவும் உள்ளது.