உருமாறிய கொரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்னென்ன?

உருமாறிய கொரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்னென்ன?
உருமாறிய கொரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்னென்ன?

'சார்ஸ்-கோவிட்-2' என்று மருத்துவ ரீதியில் அழைக்கப்படும் உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தமிழகத்திலிருந்து ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்:

* 'சார்ஸ்-கோவிட்-2' என்ற வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

> டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

> இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகளின் மாதிரிகள் இந்திய சார்ஸ்-கோவிட்-2 மரபணு வரைபட கூட்டமைப்பின் கீழ் உள்ள (ஐஎன்எஸ்ஏசிஓஜி) 10 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

> கோவிட்-19 பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு உத்திகள் குறித்த தேசியப் பணிக்குழு கூட்டம் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது.

> சார்ஸ் கோவிட்-2 வைரஸின் மரபணு மாற்று வடிவங்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) கடந்த 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

கடந்த நம்பர் 25 முதல் டிசம்பர் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் இங்கிலாந்திலிருந்து பல்வேறு விமான நிலையங்கள் வாயிலாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இதுவரை 114 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களது மாதிரிகள் கொல்கத்தா, புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள 10 இந்திய சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனை அடுத்து இங்கிலாந்திலிருந்து வந்த ஆறு பயணிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் ஆய்வகத்தில் மூன்று மாதிரிகள், ஐதராபாத் ஆய்வகத்தில் 2 மாதிரிகள், புனே ஆய்வகத்தில் 1 மாதிரியில் உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை விரிவாக கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதோடு, கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனைகள், தொற்று உறுதிசெய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரைபட கூட்டமைப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைப்பது ஆகியவை தொடர்பான ஆலோசனைகள் மாநிலங்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ''பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவருக்கு உருமாறிய கொரோனா. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரின் சோதனை மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை'' என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com