\
விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்கலாம்: நீதிமன்றம் உத்தரவு
Published on

விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் விற்கலாம் என்று மும்பை தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள், 2013-ஆம் ஆண்டிலிருந்து அவர் வழங்க வேண்டிய பணத்தில் 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.6.203.35 கோடியை திரும்பப் பெற, அவரது சொத்துகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால், பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் சொத்துகளை கலைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை தனிநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா தரப்புக்கு வரும் 18 ஆம் தேதி வரை அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com