‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை!

‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை!
‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை!

திரைப்பட பாணியில் 300 க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பொதுமக்களிடம் பண ஆசையைத் தூண்டி மோசடியில் ஈடுபட்டு பணமழையில் நனைந்து வந்துள்ளனர் சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணன் - இந்துமதி தம்பதி. சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக தரப்படும் என்பதே முக்கிய விளம்பரம். 

அடுத்து இந்த நிறுவன தயாரிப்புகளான ஊறுகாய், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான டீலர்சிப் மற்றும் அதன் மூலமாக வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பது. இப்படி பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகள் இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை நம்பி மணவண்ணனிடம் பலர் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு குறிப்பிட்டபடி பணத்தை வழங்கியுள்ளார். மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்தும் விதமாக பணம் வழங்கிய மணிவண்ணன் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு தனது தொழிலை அரங்கேற்றி வந்துள்ளார். நாட்கள் செல்லசெல்ல முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் மணிவண்ணன் அலைக்கழித்துள்ளார். முதலில் சுதாரித்துக்கொண்ட பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பின்னர் புகார்கள் அதிகரிக்கத்தொடங்கின. 

இதனையடுத்து தனிப்படை அமைத்து மணிவண்ணனை கண்காணித்த குற்றப்பிரிவு போலீசார், மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 10 சவரன் நகை, இரண்டு சொகுசு கார்கள் மற்றும் லேப்டாப், 13 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மணிவண்ணன் தம்பதி 300 க்கும் மேறபட்டோரிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com