ரயிலில் பயணித்தவர் கொரோனாவால் உயிரிழப்பு... சக ரயில் பயணிகளை தேடும் அரசு..!
கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ள நிலையில் முன்னதாக அவர் பயணிகள் ரயிலில் பயணித்தது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவின் டுமகுரு பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது உயிரிழந்துள்ளார். முன்னதாக கடந்த 5-ஆம் தேதி அவர் ரயில் மூலம் டெல்லிக்கு சென்றிருக்கிறார். பின்னர் மார்ச் 11-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
அவர் பயணித்த ரயில்களில் முழுவதும் பயணிகள் இருந்துள்ளனர். இந்த தகவல் கர்நாடகா உட்பட அந்த ரயிலில் பயணித்த அனைவருக்கும், அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புடன் அவர் பயணித்த ரயிலின் பயணிகளை தற்போது கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசு தேடி வருகிறது. அவர் மூலம் பலருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694 ஆக இருந்த நிலையில் இன்று அது 724 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15ஐ கடந்துள்ளது.