பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 72 வீடுகள்
டெல்லியில் பீட்சா விநியோகம் செய்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. கொரோனா பாதித்தவரிடம் பீட்சா வாங்கிய 72 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென் டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் பி.எம் மிஸ்ரா கூறுகையில், “அவர் கிட்டதட்ட ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவருக்கு சளி, இருமல் தொந்தரவு இருந்துள்ளது. ஆனால் சில மருத்துவமனைகள் அதை பொதுவான காய்ச்சல் என்று நிராகரித்துள்ளன. மேலும் அவருக்கு உடல்நிலை மோசமானதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் 17 பேர் பணிபுரிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சட்டர்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அந்த நபருக்கு கொரோனா இருப்பது ஏப்ரல் 11 ஆம் தேதி உறுதியானது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் 72 வீடுகளுக்கு பீட்சா டெலிவரி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட 72 வீடுகளில் உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்.” எனத் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஹாட்ஸ்பாட்கள் அல்லது ரெட் ஜோன் என வகைப்படுத்தப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வந்துள்ளது. அதே நேரத்தில் நகரத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் 1,578 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.