நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
புதுவை மாநில அரசின் குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனத்தில் சம்பளம் பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மூன்று மாதங்களுக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுவை தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், வேளாண் துறை செயலாளர் ரவி பிரகாஷ், இயக்குனர் பாலகாந்தி ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் தவிர மற்றவர்கள் நீதிபதி தண்டபாணி முன்பு ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.