ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் பதாகை ஏந்தி போராடிய சிறுமி
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக போராடியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நீண்ட விவாததிற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தனது ஒப்புதலை அளித்தார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப் பெற்று நடைபெற்று வருகின்றன. அங்கு நடக்கும் போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
போராட்டம் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக பதாகை ஏந்தி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடினார். சிறுமி ஏந்திய பதாகையில், “அரசியலமைப்புச் சட்டம் தற்போது தேவைக்கு அதிகமானதாகி விட்டது. என்னுடய வடகிழக்கு மாநிலங்களிலிருந்து உங்களின் பாசிச கைகளை எடுங்கள்” என எழுதியுள்ளார்.