குண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்
டெல்லி வன்முறையின்போது ஏற்பட்ட கலவரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். கல்வீச்சு தாக்குதலில்தான் தலைமைக் காவலர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தற்போது தெரியவந்திருக்கிறது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வன்முறையில் தலைமைக் காவலர் ரதன் லால் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தலைமைக் காவலரான ரதன் லால், கல்வீச்சு தாக்குதலில்தான் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தலைமைக் காவலர் ரதன் லால் குண்டு பாய்ந்தே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து குண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் அறிக்கையின்படி, அவரது இடது தோள்பட்டையில் நுழைந்த குண்டானது அவரது வலது தோள்பட்டை வரை சென்றதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரதன் லால் தவிரவும் சில போலீசார், வன்முறையில் காயமடைந்தனர். அவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நிலைமை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.