நான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தரப்பில் இருந்து யாரை வேட்பாளராக நிறுத்துவது, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது போன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் தேர்தல் என்பதால், இவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் நிலவரத்தை தெளிவாக கூறாத நிலையில் , அனைத்து கட்சிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முக்கிய தலைவருமான திக்விஜய் சிங் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
செய்தி நிறுவனத்திடம் பேசிய திக்விஜய் “ நான் ஓட்டுக் கேட்டு வந்தாலோ, பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று பேசினாலோ காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலைக்கு செல்லும், ஓட்டுகள் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும் “அதிக அளவில் அனைவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்லும், நண்பனா, எதிரியா என பார்க்காமல் அனைத்து தொண்டர்களும் வேலை செய்ய வேண்டும்” எனவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.
திக்விஜய் சிங்க்கின் கருத்து குறித்து பதிலளித்த மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் “எந்த அடிப்படையில் திக் விஜய் சிங் இது போன்று கருத்து தெரிவித்தார் என தெரியவில்லை, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள், தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார். திக்விஜய் சிங்க்கின் இந்த திடீர் கருத்தால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் தனது கூட்டணியை உடைக்க திக்விஜய் சிங்தான் காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.