பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீதான நடத்தை விதிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், ஜனநாயகத்துக்கு மற்றொரு கருப்பு நாள் என மோடி அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை தள்ளுபடி செய்வதில் தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அசோக் லவாசா தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை சிறுக, சிறுக அரிக்கும் போக்கு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, முதலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக குறை கூறினார்கள், அடுத்ததாக ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா, தொடர்ந்து சிபிஐ இயக்குநர் பதவி நீக்கம், தற்போது தேர்தல் ஆணையத்தில் பிரிவினை என மோடி ஆட்சியில் அரசுத் துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மற்றொரு கருப்பு நாள் என்றும் அவர் சாடியுள்ளார்.
அசோக் லவாசா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்களின் முடிவு ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்றும் தேர்தல் ஆணையத்தில் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன என தெரிவித்துள்ளார்.