“ராஜினாமா செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி” - காங்கிரஸ் ஆஃபரும்.. எம்.எல்.ஏக்கள் மறுப்பும்..
கர்நாடகாவில், பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அமெரிக்கா சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவரசரமாக பெங்களூரு திரும்பிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி. தேவேகவுடா, துணை முதலவர் பரமேஸ்வரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை செயல்படுத்தும் வகையில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது.
இதனிடையே, மும்பையில் முகாமிட்டுள்ள 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளனர். ராஜினாமா முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்றும், அனைவரும் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பாட்டில் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஏலகங்காவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஹோட்டலிலேயே தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.