நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இதன்மூலம் ஜனநாயக படுகொலை நடப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கூச்சல் குழப்பங்களுக்கு இடையில் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதாக விமர்சித்தார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்த பிரச்னைகள் குறித்தும் பேச எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தவிர்ப்பதற்காக பிரதமர் நாடாளுமன்றத்திற்கே வருவதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதனிடையே புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், மிருகத்தனமான பெரும்பான்மை இருப்பதால் மத்திய அரசு விருப்பம்போல் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.