பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ராகுலுக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளிவந்த மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. மேலும் அரசு வழங்கிய எம்பிக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யுமாறும் அவருக்கு கெடு வழங்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் டெல்லியை சேர்ந்த மகிளா காங்கிரஸ் சேவாதள் தலைவர் ராஜ்குமாரி குப்தா மங்கோல்புரியில் இருக்கும் தனது 4 மாடி வீட்டை ராகுலுக்காக எழுதித் தர முன்வந்துள்ளார். இதுகுறித்து ராஜ்குமாரி குப்தா, “இந்த வீட்டுக்கான இடம் என்னைப் போன்ற பலருக்கு இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது கிடைத்தது.
தற்போது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படும் ராகுல் காந்திக்கு பரிசாக அதனை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். அவரை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களை வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.