\
பறிமுதலான வாகனங்களில் காய்கறித் தோட்டம்: புதுமை செய்யும் கேரள காவல்நிலையம்

பறிமுதலான வாகனங்களில் காய்கறித் தோட்டம்: புதுமை செய்யும் கேரள காவல்நிலையம்

பறிமுதலான வாகனங்களில் காய்கறித் தோட்டம்: புதுமை செய்யும் கேரள காவல்நிலையம்
Published on

எந்த காவல்நிலையத்துக்குச் சென்றாலும் அங்கே சிதிலமடைந்த நிலையில் வாகனங்களைப் பார்க்கலாம். அதுவொரு பழைய பொருள் கடையைப்போல காட்சிதரும். அப்படியொரு கேரள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளைக் கடந்த மணல் லாரிகளில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர். இதுபற்றி திநியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்நிலையங்களில் தேங்கியுள்ள வாகனங்களை ஏலம் விடுவதில் சட்டச் சிக்கல்கள் தொடர்கின்றன. 2019 அறிக்கையின்படி, கேரளாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பறிமுதல் வாகனங்கள் காவல்நிலையத்திலேயே கிடக்கின்றன.

பாழடைந்து வீணாகும் வாகனங்களில் என்ன செய்யலாம் என யோசித்த திருச்சூர் மாவட்டம், செருதுருதி காவல்நிலையத்தினர், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். விவசாயம் செய்துவரும் சிவில் காவல் அதிகாரியான ரெங்கராஜ், காய்கறித் தோட்டத்தைக் கவனித்துக்கொள்கிறார். சில காவலர்களும் அவருக்கு உதவியாக உள்ளனர்.



"எங்களிடம் மணல் கடத்தலில் பிடிபட்ட மினி லாரிகள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு, மணலுடன் அப்படியே கிடக்கும் லாரிகளில் காய்கறிகள் வளர்க்கத் தொடங்கினோம். இதுவொரு வெற்றிகரமான முயற்சியாக இருக்கிறது. கடந்த வாரம்தான் அறுவடை செய்தோம். எங்கள் கேன்டீனுக்குத் தேவையான காய்கறிகள் எங்களுக்குக் கிடைத்தன " என்று உற்சாகத்துடன் பேசுகிறார் காவல் அதிகாரி சிம்சன்.

தற்போது வாகனங்களில் காய்கறிகளை வளர்த்து ருசி கண்ட காவலர்கள், மற்ற வாகனங்களுக்கும் அதனை விரிவுபடுத்தவுள்ளனர். முதல்கட்டமாக கீரை, பீன்ஸ் மற்றும் வெண்டைக்காய் வளர்த்தார்கள். அடுத்தகட்டமாக பிற காய்கறிகளையும் வளர்க்கும் திட்டத்தையும் காவல்துறையினர் வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com