"கரப்பான் பூச்சி கட்சிகளுக்குப் பாடம் புகட்டுவோம்" - பாஜக தலைவர் நிதின் நபின் எச்சரிக்கை
தெலங்கானாவில் பாஜகவை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் நோக்கில் 3 நாள் சுற்றுப்பயணமாக நிதின் நபின் அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். வாரங்கலில் உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய அவர், பழங்குடியின மக்களுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.
மேலும், பிரதமர் மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் பாஜவின் 'இரட்டை எஞ்சின்' அரசைத் தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகளை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'வைரஸ்' எனப் பாஜக தேசியத் தலைவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடையே நிதின் நபின் பேசுகையில், "நாட்டை அழிக்கும் நோக்கத்தோடு புதிய வைரஸ்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தற்போது உருவாகி வருகின்றன. இந்தக் கட்சிகள் இந்தியாவைத் துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டுகின்றன. இத்தகைய தேசவிரோத சக்திகளுக்குப் பாரதிய ஜனதா கட்சியின் சாதாரணத் தொண்டர்கள் கூடக் கடுமையான பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

