போபால் விஷவாயு விவகாரம் To ஜெ. ஜாமீன்: மூத்த வழக்கறிஞர் நாரிமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் வயது முதிர்வு காரணமாக இன்று (பிப்.21) காலமானார்.
பாலி எஸ்.நாரிமன்
பாலி எஸ்.நாரிமன்ட்விட்டர்

இந்தியாவின் பிரபலமான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், அரசியல் சாசன சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான பலி எஸ்.நாரிமன் இன்று, வயது முதிர்வு காரணமாக தனது 95வது வயதில் காலமானார். நாரிமனின் மறைவிற்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும். பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பாலி நாரிமன், தனது பணிக் காலத்தில் போபால் விஷவாயு வழக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, டிஎம்ஏ பை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார். போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

1972 முதல் 1975 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு பத்மபூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இவர் 1999 முதல் 2005 வரை பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com