"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தைக் கொன்றுவிடும்" - முதலமைச்சர் ஸ்டாலின்!
அரசமைப்பு சட்ட திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்த மசோதா என இரண்டு மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தது.ஆனால், அதனை மாற்றி,இன்றைக்கு பதில் நாளைக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
ஏற்கெனவே, இந்த மசோதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதே வேளையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா கூட்டணி வலுவாக எதிர்க்கிறது. இது நம் நாட்டை ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு போய் தள்ளிவிடும். மேலும் பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை முற்றிலும் அழித்துவிடும்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான அதிபர் தேர்தல் முறையை நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு முயல்கிறது. முன்மொழியப்பட்ட இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், சட்ட ரீதியாக இருக்கும் வாய்ப்புகளை நீக்கி விடும். நம்முடைய அரசியலமைப்பை சர்வாதிகார தன்மையின் கீழ் கொண்டு போய் சேர்த்து விடும்.
மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும். இந்தியாவின் அரசியலை மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும் கூட, நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பாஜகவின் தோல்வியிலிருந்து திசை திருப்ப ஒரு துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்துப் போராட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.