“தொல்லியல் படிப்புகளில் தமிழைச் சேர்த்ததற்கு நன்றி”-பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை மதுரை எம்பி சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து தமிழ்மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலினும் விமர்சித்தார். பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், அரபி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழை திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல தலைவர்களிடம் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. தொல்லியல் துறை நடத்தவுள்ள 2 ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகளில் ஒன்றாக தமிழ் முதுகலைப்படிப்பையும் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தொல்லியல் பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல்துறை படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழில் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

