ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாட்களில் ரூ.100 ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. சில இடங்களில் பெட்ரோல் ரூ.90க்கு விற்கப்படுகிறது , தமிழகத்தில் ரூ84க்கு விற்கப்படுகிறது. தினமும் பெட்ரோல் விலை ஏறினாலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அமைச்சரும் டாலர் மதிப்பு உயர்வதால் பெட்ரோல் விலை உயர்கிறது என கூறினார். இதிலிருந்து ரூபாய் மதிப்பு மீளும் வரை எந்த நடவடிக்கையும் இருக்க போவதில்லை எனத் தெரிகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு சார்பில் கலால் வரியும், மாநில அரசு சார்பில் மதிப்புக் கூட்டு வரி எனும் வாட் வரியும் உள்ளது. இதில், மத்திய அரசு தனது கலால் வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர அரசு தனது வாட் வரியில் இருந்து லிட்டருக்கு இரண்டு ரூபாய் என்ற கணக்கில் விலைக் குறைப்பு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாநில உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பின்னர் சந்திரபாபு நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் தலா இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக நேற்று ராஜஸ்தான் அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையில் தலா ஒரு ரூபாய் குறைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு கடந்த ஜூன் ஒன்றாம் அறிவித்தது.