"சோழர் கால ஆட்சியே சிறந்த சான்று!"- நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நிகழ்வில் மோடி பெருமிதம்

"சோழர் கால ஆட்சியே சிறந்த சான்று!"- நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நிகழ்வில் மோடி பெருமிதம்
"சோழர் கால ஆட்சியே சிறந்த சான்று!"- நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நிகழ்வில் மோடி பெருமிதம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சோழர் கால தேர்தல் நடைமுறைகளைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், "புதிய நாடாளுமன்ற கட்டடம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது" என்றார்.

நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தப் புதிய கட்டடம், 'தற்சார்பு இந்தியா' குறிந்த தொலைநோக்குப் பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகவும் அமைவதுடன், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடவுள்ள 2022-ம் ஆண்டில், 'புதிய இந்தியா'-வின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும் என்கிறது மத்திய அரசு.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, "இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்தது என்பதற்கு சோழர் கால ஆட்சி சிறந்த சான்று. சோழர் ஆட்சிக் காலத்தில் தேர்தல் நடைமுறை இருந்தது. அதில் மக்களே தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது" என்று செங்கல்பட்டு அருகே உள்ள உத்தரமேரூரில் சோழர் கால கல்வெட்டுகளை சுட்டிக்காட்டி பேசினார். 

சோழர் காலத்தில் தேர்தல் நடைமுறை இருந்ததை உத்தரமேரூர் கல்வெட்டுகளும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடலாம் யாரெல்லாம் போட்டியிட தகுதியில்லை என்பது போன்ற விதிகளையும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன என்று சோழர் காலம் குறித்து ஆய்வுகள் செய்த வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியது: "இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இன்றைய தினம் குறிப்பிடத்தகுந்த நாள். இந்தியத் தன்மை நிறைந்ததாக இருக்கும். இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு புதிய கட்டட கட்டுமானப் பணி தொடங்கியிருப்பது நமது ஜனநாயகப் பாரம்பரியத்தில், மிக முக்கியமான காலகட்டம். நாடாளுமன்ற புதிய கட்டடத்தை, இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கட்டுவோம். இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதைவிட, மென்மேலும் அழகு சேர்க்கக் கூடியதும், பரிசுத்தமானதுமான வேறு செயல் ஏதும் இருக்க முடியாது.  

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, முதன்முதலில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தருணத்தையும் நினைவுகூர்கிறேன். முதன்முறையாக நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, எனது காலடியை எடுத்து வைப்பதற்கு முன்பாக, தலைவணங்கி இந்த ஜனநாயகக் கோயிலில், எனது மரியாதையை செலுத்தினேன். 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் திறனை அதிகரிப்பது, அவர்களது பணிக் கலாசாரத்தை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள், நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்தது போல, புதிய கட்டடம், 'தற்சார்பு இந்தியா'-விற்கு அடையாளமாகத் திகழும். பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுபோல, 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக புதிய கட்டடம் அமையும்.  

ஜனநாயகம் என்றால், அனைத்து இடங்களிலும், தேர்தல் நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிர்வாகத்தைத் தான் குறிக்கும். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது வாழ்வியல் நற்பண்புகள், வாழ்க்கைக்கான வழி மற்றும் தேசத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. 

இந்திய ஜனநாயகம் பல நூற்றாண்டு கால அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது வாழ்க்கையின் ஓர் அம்சமாக மட்டுமின்றி, ஒழுங்கு நடைமுறையாகவும், வாழ்க்கை மந்திரமாகவும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயக வலிமை என்பது நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்திய ஜனநாயகம், தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருவதுடன், ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

இந்திய ஜனநாயகம் எப்போதுமே ஆளுகையுடன், கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைக்கும் வழிமுறையாக இருந்து வருகிறது. மாறுபட்ட கருத்துக்கள், மாறுபட்ட சிந்தனைகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அதிகாரமளிப்பதாக அமையும். நடைமுறைகளிலிருந்து முழுமையாக விடுபடாதவரை, மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்திய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்கிறது. 

கொள்கைகளும், அரசியலும் மாறுபட்டாலும், நாம் அனைவரும் மக்களுக்கு சேவையாற்றத்தான் வந்திருக்கிறோம் என்ற குறிக்கோளில், எவ்விதக் கருத்து வேறுபாட்டிற்கும் வாய்ப்பளிக்கக் கூடாது.  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ விவாதங்கள் நடைபெற்றாலும், அதில் தேச சேவைக்கான உறுதிப்பாடும், தேச நலன் சார்ந்த அர்ப்பணிப்பும், தொடர்ந்து பிரதிபலிக்கும். 

நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்படுவதற்கு ஜனநாயகம் அடிப்படை என்பதில், சந்தர்ப்பவாதங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது தங்களின் கடமை என்பதை மக்கள் நினைவுகூர வேண்டும். நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ஒவ்வொரு உறுப்பினரும், பொதுமக்களுக்கும், அரசியல் சாசனத்திற்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஜனநாயகக் கோயிலை புனிதப்படுத்த இதைவிட வேறு எந்த சடங்கும் இல்லை. மக்களின் பிரதிநிதிகளாக இந்த ஆலயத்திற்குள் உறுப்பினர்கள் நுழைவதே, அதனை புனிதப்படுத்தும்.   அவர்களது அர்ப்பணிப்பு, அவர்களது சேவை, செயல்பாடு, சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்கள், இந்த ஆலயத்தின் உயிர்மூச்சாகத் திகழும். 

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அவர்களது முயற்சிகள், இந்த ஆலயத்திற்கு உயிரளிக்கும் சக்தியாக மாறும். மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், தத்தமது அறிவாற்றல், திறமை, கல்வி மற்றும் அனுபவத்தை முழுமையாக வழங்கினாலே, புதிய நாடாளுமன்றக் கட்டடம் புனிதமடையும். 

நாட்டு மக்கள் அனைவரும், இந்தியாவை முதன்மையான நாடாகத் திகழச் செய்வதற்கு உறுதியேற்பதுடன்,  இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி மட்டுமே பிராத்தனை செய்வதோடு, ஒவ்வொரு முடிவும் நாட்டின் வலிமையை அதிகரிப்பதுடன், நாட்டின் நலனே தலையாயது என்ற உணர்வோடு இருக்க வேண்டும். நாட்டு நலனைவிட, தங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று, நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும். சுய நலனைவிட, நாட்டு நலன் பற்றிய சிந்தனையே மேலானது என்ற உணர்வு ஏற்பட வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைவிட, வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது. கண்ணியம் மற்றும் நாட்டின் அரசியல் சாசன அம்சங்களை நிறைவேற்றுவது தான், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக இருக்க வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com