“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர்
சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைக் கடுமையாக தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதி மக்கள் வீடு உடைமைகளை இழந்து கடும் சேதத்திற்கு ஆளாகினர்.
உணவு உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்தப் புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள், வனவிலங்குகள் இறந்துள்ளன.
இதையடுத்து மத்திய அரசிடம் இருந்து காரைக்காலுக்கு ரூ. 187 கோடி நிவாரணம் கோர உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லி சென்ற நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புயல் சேதத்துக்கு ரூ. 187 கோடி நிவாரணம் வழங்க கோரியும் காரைக்காலை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் 26-ந்தேதி காலை மத்தியக்குழுவினர் காரைக்காலில் கஜா புயல் சேதங்களை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதற்கு பின் அன்று மாலை அவர்கள் புதுச்சேரி வர உள்ளதாகவும் அப்போது போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.187 கோடி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.