பீகாரைச் சேர்ந்தவர் ராக்கி குப்தா. பிரபல மாடல் அழகியான இவர், பீகார் மாநில சாப்ரா நகர் மேயர் தேர்தலில் முன்னாள் மேயர் சுனிதாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில், பொய்யான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ததன் பேரில் இவருடைய பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2022) ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராக்கி குப்தா தனது இரண்டு குழந்தைகளைப் பற்றிய தகவல்களை மட்டும் கூறிவிட்டு, மூன்றாவது குழந்தையைப் பற்றிய தகவலை மறைத்ததாகச் சொல்லப்படுகிறது. பீகார் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது. எனவே, ராக்கி தேவியின் 3 குழந்தைகள் குறித்து எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இதன்மீது கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து பீகார் தேர்தல் ஆணையம் இப்போது தகுதி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில், ராக்கி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சரண் மாவட்ட நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் பீகார் முனிசிபல் சட்டம் 2007-ன்பிரிவு 18(1)ன் கீழ் குப்தாவை மேயர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஆணையம். இதன்படி, பீகார் குடிமகனுக்கு ஏப்ரல் 4, 2008க்குப் பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால், அவர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறுகிறது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் குழந்தையை தத்து கொடுத்தாலும், அவர்கள் அந்தக் குழந்தையின் உயிரியல் பெற்றோர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், நகராட்சித் தேர்தலுக்குத் தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் அதே சட்டம் தெளிவுபடுத்துகிறது. முன்னதாக, சரன் மாவட்ட மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில், ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாக பீகார் எஸ்இசிக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இருப்பினும், அந்த குழந்தை வருண் பிரகாஷின் உறவினர்களால் தத்தெடுக்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால், குழந்தையின் ஆதார் விவரங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியோரின் பெயர்கள் உயிரியல் பெற்றோர்களாக உள்ளன என்று கூறினார்.
தனது தகுதி நீக்கம் ராக்கி குப்தா, “பீகார் எஸ்.இ.சியின் முடிவை நான் மதிக்கிறேன். மேயர் தேர்தலில் நான் வெற்றிபெற்றதிலிருந்து எதிர்க்கட்சிகள் என்னைத் தொடர்ந்து வருகின்றன. இது என்னுடைய தோல்வியல்ல, என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் தோல்வி. எனது ஆறு வயது மகன் ஸ்ரீபிரகாஷை என் கணவரின் உறவினர்கள் சட்டப்பூர்வமாக தத்தெடுத்துள்ளனர். இதனால் எனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளனர்” என்று கூறினார்.
இப்போதைக்கு, ராக்கி குப்தா பதவி நீக்கம் செய்யப்பட்டதால், மேயர் பதவி காலியாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராக்கி குப்தா பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.