தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவி ஏற்கிறார். இதனையொட்டி ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறிய நிலையில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில் டிஆர்எஸ் 88 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகிறார்.
இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இன்று பதவி ஏற்க உள்ளார். ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் பகல் 1.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி ஏற்பு விழாவை ஒட்டி ராஜ்பவன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையில் பொதுமக்கள் ராஜ்பவன் சாலையை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளர்.
சந்திரசேகரராவோடு ஒன்றிரண்டு அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சந்திரசேகர் ராவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 88 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்றது.தெலங்கானா சட்டப்பேரவையில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமாக 88 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளதை அக்கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

