சுற்றுச்சூழல் மாசுபாடு: சைக்கிள் ஓட்டி அசத்திய சந்திரபாபு நாயுடு!
ஆந்திராவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நவீன மிதிவண்டியை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆந்திர தலைநகர் அமராவதியில் நவீன ஸ்போர்ட் சைக்கிள்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தினார். இதற்காக தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள 30 சைக்கிள்களை ஜெர்மனி நாட்டிலிருந்து ஆந்திர அரசு இறக்குமதி செய்துள்ளது. ஆந்திரத் தலைநகர் அமராவதியின் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த சைக்கிள்களை யார் வேண்டுமானாலும் எடுத்து உபயோகிக்கலாம். இதை அலுவலக ஊழியர்கள் இலவசமாகவும், பார்வையாளர்கள் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தியும் ஓட்டிப்பார்க்கலாம்.
இதற்காக தனியாக ஒரு ஏடிஎம் கார்டு போன்ற ஒரு ஸ்மார்ட் கார்டு, செக்யூரிட்டி அறையில் வழங்கப்படும். மேலும், இதற்கென தனி பாஸ்வேர்டு கொடுக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலமாக மட்டுமே இந்த சைக்கிள்களின் பூட்டு திறக்கும். இந்த சைக்கிள் நிறுத்த 3 இடங்களில் 'பார்க்கிங்' ஏற்பாடும், தனி சைக்கிள் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களை உபயோகித்த பின்னர், அதனைக் தலைமை செயலகத்தில் உள்ள அமைக்கப்பட்டுள்ள 3 பார்க்கிங் பகுதியில் விட்டுச் செல்லலாம். இந்த சைக்கிள்கள் மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காது. மேலும் இதில் 3 கியர்கள் உள்ளன.