”திகார் சிறையில் எனக்கு ப்ரோப்போஸ் செய்தார் சுகேஷ்” லீலைகளை அம்பலப்படுத்திய சீரியல் நடிகை!

”திகார் சிறையில் எனக்கு ப்ரோப்போஸ் செய்தார் சுகேஷ்” லீலைகளை அம்பலப்படுத்திய சீரியல் நடிகை!
”திகார் சிறையில் எனக்கு ப்ரோப்போஸ் செய்தார் சுகேஷ்” லீலைகளை அம்பலப்படுத்திய சீரியல் நடிகை!

“சிறையில் வைத்து என்னிடம் சுகேஷ் சந்திரசேகர் ப்ரோப்போஸ் செய்தார்” என இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா கூறியது தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரம் உட்பட பல மோசடி மற்றும் முறைகேட்டு வழக்குகளில் பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும் போது சுகேஷ் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது டெல்லி காவல்துறைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.

இதுமட்டுமல்லாது சுகேஷின் செயலால் டெல்லியில் உள்ள அமைச்சர்களே ஆட்டம்கண்டு போயிருப்பதால் அரசியல் களமும் பல சலசலப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையே பாலிவுட் நடிகைகளான ஜாக்லின் ஃபர்னாண்டஸ் மற்றும் நோரா ஆகியோர், சுகேஷுடன் நெருக்கமாக பழகி இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்திலிருந்து தப்பவில்லை.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்த விசாரணை நடந்து வரும் வேளையில் இதன் அடுத்த விசாரணை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திகார் சிறையில் வைத்து கடந்த 2018ம் ஆட்னு சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாக பிரபல இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா என்பவர், ` எகனாமிக்ஸ் டைம்ஸ்’ ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பது முறைகேட்டு வழக்கில் மேலும் பொறியை கிளப்பியிருக்கிறது.

அதில், “பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக 2018ம் ஆண்டு மே 18ம் தேதி மும்பை ஏர்போர்ட்டில் இருந்து டெல்லிக்கு சென்றேன். அப்போது ஏஞ்சல் கான் என்ற பெண்ணை சந்தித்தேன். பள்ளி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல வந்ததாக கூறினார். டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து காரில் சென்றபோது திடீரென வேறு காரில் மாறும்படி அவர் கூறினார். அதன்படியே கிரே கலர் இன்னோவா காரில் மாறிய பிறகு அந்த கார் திகார் ஜெயிலுக்கு சென்றது.

இதுபற்றி கேட்டபோது ஜெயில் வழியாகத்தான் பள்ளிக்கு செல்ல வேண்டுமென அந்த பெண் கூறினார். திகார் ஜெயிலில் இறங்கிய போது அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளானேன். நான் மாட்டிக்கொண்டதோடு மும்பையில் என் பெற்றோருடன் இருக்கும் என் இரண்டு குழந்தைகளை எண்ணி அச்சமுற்றேன். ஒரு அறைக்குள் சென்றபோது அங்கு லேப்டாப்கள், வாட்ச்கள், நிறைய ஆடம்பர பொருட்கள், ஒரு சோஃபா, போர்ட்டபிள் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் என எல்லாமும் இருந்தன.

அப்போது ஃபேன்சியான டி.ஷர்ட்டுடன் வந்த சுகேஷ் சந்திரசேகர், எனது ரசிகர் என்று கூறியதோடு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருமகன் தான் என்றும் தென்னிந்தியாவில் டிவி சேனல் ஒன்றின் ஓனர் என்றும் அவரை அறிமுகம் செய்துக் கொண்டார். `எதற்காக என்னை இங்கு அழைத்தாய்? ஏதோ நிகழ்ச்சி என்று கூறியதால்தான் என்னுடைய ஆறு மாத குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்’ எனக் கூறினேன்.

பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென என் முன் மண்டியிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டார். இதைக் கேட்டு அதிர்ந்து போன நான் அவரை நோக்கி கத்தியதோடு, எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றேன். அதற்கு அவர், என் கணவர் சரியானவர் அல்ல. என் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் இருப்பதாக கூறினார். இதையெல்லாம் கேட்டதும் பதற்றத்தில் அழுதுவிட்டேன்.” என சாஹத் கண்ணா கூறியிருக்கிறார்.

சுமார் அரைமணி நேரம் திகார் சிறையில் இருந்த சாஹத் கண்ணா, அதன் பிறகு ஏஞ்சல் கானுடன் விமான நிலையத்துக்கு திரும்பியிருக்கிறார். சாஹத் மும்பை செல்வதற்கு முன்பு சுகேஷ் கொடுக்கச் சொன்னதாக ஏஞ்சல் கான் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து 10 லட்சம் ரூபாய் கொடுக்கும்படியும், இல்லாவிடில் திகார் சிறைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சியை டிவி ஒளிபரப்பிவிடுவேன் என மிரட்டல் வந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் சம்மன் வந்ததும்தான் அந்த சுகேஷ் சந்திர சேகர் மோசடி பேர்வழி என்று தெரிய வந்தது என சாஹத் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com