199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி
ரூ.1,800 கோடி செலவில் 199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய சிறைகளில் நடக்கும் வன்முறைகள் மற்றும் கைதிகளின் கூட்ட நெரிசல் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையில் 199 புதிய சிறைகளை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்திய சிறைகளின் நிலை குறித்து காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிருஷ்ணன் ரெட்டி, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வி.எஸ்.கே. கமுதி மற்றும் திகார் சிறையின் மூத்த அதிகாரி டிஜி சந்தீப் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சிறைகளில் கைதிகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பெருகி வரும் குற்றச்சம்பவங்களுக்கு கைதிகளை அடைக்க தற்போது இருக்கும் சிறைகள் போதாது எனவும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சிறைகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய சிறைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1572 சிறைக்காவலர்கள் தங்குமிடம் மற்றும் 8568 சிறை அலுவலர்கள் தங்குமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய 199 சிறைகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இதில் தாதாக்கள் மற்றும் தீவிரவாதிகளை எப்படி கையாளுவது என்பது தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.