காவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்”

காவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்”
காவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்”

காவிரி தீர்ப்பை அமல்படுத்தும் செயல்திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அமைப்பின் அதிகாரம், செயல்பாடுகள், பணிகள் குறித்து நான்கு பக்க அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அம்சங்கள் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளாக இருந்தாலும் சிலவற்றில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாடு இருக்கும் வகையில் அந்த மாற்றங்கள் இருக்கிறது என்கின்றனர் விவசாய சங்கத்தினர். 

அமைப்பின் முழு நேர பணியாக கூறப்பட்டுள்ள அம்சத்தில் அணைகளின் இயக்கம்,காவிரி ஒழுங்காற்று குழு உதவியோடு திறக்கப்படும் நீர் ஆகியவற்றை கண்காணிப்பதே இதன் பணி என கூறப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால ஏற்பாடாக ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் ஒரு மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது. வெறும் கூட்டங்களை மட்டுமே நடத்திய இந்த அமைப்பு இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை. இதே போன்றே செய்ல்திட்டமும் அமைந்து விடுமா என்ற சந்தேகம் எழுகிறது. 

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ‘ முந்தைய மேற்பார்வை குழுவை விட அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பாக இது அமையும் என்றும், மாநிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வழங்கப்படும் என்றனர். மாநிலங்கள் யாருக்காவது அமைப்பின் முடிவில் திருப்தி இல்லையென்றால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்றும் கூறினர். 

மிக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், காவிரி உரிமை என்பது மேலாண்மை வாரியத்திடம் இருந்து தற்போது மத்திய அரசு வசம் போயிருக்கிறது. பிரதமரையே சந்திக்க முடியாத தமிழக அரசு, அநீதி என யாரிடம் வருங்காலத்தில் முறையிடும் என்ற சந்தேகம் எழுகிறது. தீர்ப்பாய உத்தரவில் மத்திய அரசிடம் முறையிடலாம் என கூறப்பட்டிருந்ததே தவிர, அவர்களுக்கே முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் என கூறவில்லை. ஆனால் தற்போதைய செயல்திட்டம் அதனை கொண்டு வந்து, மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது

அடுத்தது அணை கட்டுப்பாடு ; அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி வாரியம் வைத்திருக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் இங்கு அணை திறப்பை கர்நாடகா முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த காலங்களின் கர்நாடகா அணை கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு திறக்காமல் தவிர்த்தது பிரச்னை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அணை கட்டுப்பாட்டை வாரியத்திடம் கொடுக்க சில சட்ட சிக்கல்கள் இருந்தாலும், உச்சநீதிமன்றம் மூலம் அதனை சரி செய்திருக்கலாம். ஆனால் மத்திய அரசு அதை தவிர்த்திருக்கிறது. 

மத்திய அரசு காவிரியில் தன்னை அதிகாரம் பொருந்திய ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறது என்கிறார் காவிரிஉரிமை மீட்பு குழுவின் பெ.மணியரசன். ” காவிரி தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்கிறது செயல்திட்டம், அதோடு மத்திய அரசு கூறும் அனைத்தையும் உறுதி செய்வது இந்த அமைப்பின் கடமை என்றும் சொல்கிறார்கள். என்ன பயிரிடுவது, பாசன முறை, குறைந்த நீர் செலவு என அனைத்தையும் பரிந்துரைக்கும் என்கின்றனர் ; பாரம்பரிய விவசாயத்துக்கு பழக்கப்பட்ட மண்ணில் வேறு எதையோ புகுத்த முயல்கிறார்களோ என சந்தேகிக்கிறார். 

அமைப்பு நினைத்தால் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செயல்திட்டம் அனுமதி கொடுக்கிறது. தனியாரின் பங்களிப்பு தொழில்நுட்ப உதவியோடு இருக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com