கிரேட் நிக்கோபார் | பொது -இராணுவ விமான நிலையத்துக்கு ஒப்புதல்!
கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சிஞ்செனில் ரூ.13,000 கோடி மதிப்பில் புதிய பொது-இராணுவ விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஎன்எஸ் பாஸ் தளத்தை நீட்டிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மலாக்கா ஜலசந்திக்கு அருகில் உருவாகும் இந்தத் திட்டம், இந்தியாவின் உள்கட்டமைப்பில் முக்கிய இடம் பெறும்.
கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு புதிய பொது-இராணுவ விமான நிலையம் கட்டுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎன்எஸ் பாஸ் (INS Baaz) தளத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, கிரேட் நிக்கோபாரில் ரூ. 13,000 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையத்தை அரசு அமைக்கவுள்ளது
இந்தத் திட்டம், கலாதியா விரிகுடாவுக்கு அருகிலுள்ள சிஞ்செனில் (Chingen) இந்த புதிய விமான நிலையம் அமையவுள்ளது. இது பொது மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலபரப்பு அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த தடைகள் காரணமாக, 'ஐஎன்எஸ் பாஸ்' (INS Baaz) தளத்தில் தற்போதுள்ள 4,500 அடி நீளமுள்ள ஓடுபாதையை சுமார் 10,000 அடி வரை நீட்டிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று கண்டறியப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமான நிலையம், கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக அமைய உள்ளது. இது மலாக்கா ஜலசந்தி கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு அருகில் அமையவுள்ளது. ₹81,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட நான்கு முக்கிய உள்கட்டமைப்பு கூறுகளில் இந்த வசதியும் ஒன்றாகும்.

