அதிக ரத்து கட்டணம்.. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆன்லைன் விமான டிக்கெட் தளங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என விசாரிக்க உத்தரவிட்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த தேஜிந்தர் பக்கா, 'அகோடா' (Agoda) தளம் வழியாக முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை ரத்து செய்ய முயன்றபோது, 4,764 ரூபாய் ரத்து கட்டணத்தை கழித்துக்கொண்டு 1,571 ரூபாய் மட்டுமே திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், நேரடியாக ஆகாசா ஏர் நிறுவனத்திடம் இது குறித்து சரிபார்த்தபோது, விமான நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தை விட ஆன்லைன் தளம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தை நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள், விமான நிறுவனங்கள் நிர்ணயித்ததை விட அல்லது முன்பதிவின் போது தெரிவித்ததை விடக் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனவா? என்பதை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகையச் செயல்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்' எனக் கருதப்படும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தளங்கள் மீது 'கிளாஸ் ஆக்ஷன்' உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க CCPA-வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் இத்தகையச் செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது" என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் தளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

