'தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு' - பினராயி விஜயன்
கேரளாவில் மழை, வெள்ளத்தால் இதுவரை 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் , வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பிற மாநில அரசுகள் உதவி வருவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் 22 ஹெலிகாப்டர்கள், கடற்படையை சேர்ந்த படகுகள், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த 57 படகுகள், கடலோர காவல்படையைச் சேர்ந்த 35 படகுகள், 600 தனியார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்புப் படையினர், ராணுவ பொறியியல் குழுவினர், தமிழகம் மற்றும் ஒரிசாவில் இருந்து சென்றுள்ள தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், தொண்டு அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஓணம் பண்டிகைக்காக மக்கள் தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக பெருமழை மாநிலத்தை ஆட்டி படைத்துவிட்டதாக அவர் கூறினார். ஓணம் பண்டிகைக்காக அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு ஏற்கனவே வந்த நிலையில், தற்போது பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அவற்றை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

