வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் பற்கேற்றனர். அப்போது வாகனம் இயக்கும் திறன்பெற்றிருந்தாலும் போதிய கல்வி இல்லாததால் பலர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர் என ஹரியானா மாநில அரசு வலியுறுத்தியது.மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989,பிரிவு 8இன் படி, நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
இந்தச் சூழலில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பவும் உதவியாக இருக்கும் என போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்கினாலும் ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் தேர்வில் எந்த வித சமரசத்தையும் நிச்சயம் ஏற்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் கூறியுள்ளது.