பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் ஜெட்லியுடன் பிரதமர் ஆலோசனை செய்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடம் அதிருப்தி ஏற்படாமல் தவிர்ப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை மீதான உற்பத்தி வரிக் குறைப்பு பற்றி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் மதிப்பு ஒரு டாலர் ரூ.74ஐ நெருங்குவதால் இறக்குமதி பாதிப்பு பற்றியும் பிரதமர் ஆலோசனை செய்திருக்கிறார்.
கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து பேரல் 86 டாலரை தொட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ளது. இதனால், ஆலோசனையில் விலைக்குறைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என செய்திகள் வெளியானது.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, "எரிபொருள் மீதான கலால் வரி ரூ1.50 குறைக்கப்பட்டுள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் விலையை ரூ1.50 குறைக்கப்படும். மேலும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதனால், மொத்தம் ரூ2.50 குறைய வாய்ப்புள்ளது. மாநில அரசும் இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கலால் வரி ரூ1.50 குறைக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்” என தெரிவித்தார்.