விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் விவசாய அமைப்பிடம் கோரப்படும் வெளிநாட்டு நிதி விவரங்கள்!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப்பை தலைமையிடமாக இயங்கி வரும் பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பிடம் மத்திய முகமை நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிதி விவரங்களை சமர்ப்பிக்கச் சொல்லி மின்னஞ்சல் மூலம் கோரியுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அரசு சார்பற்ற அமைப்புகளின் நிதி விவரங்களை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில் பாரதிய கிசான் யூனியனிடம் இந்த விவரம் கேட்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசு எங்களது போராட்டத்தை எப்படியேனும் களைக்க வேண்டுமென்ற, ஒற்றை நோக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது NRI நிதி குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். பஞ்சாப்பில் உள்ள பல நல் உள்ளம் படைத்த NRI-கள் அவர்களது வியர்வையை சிந்தி சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு பங்கை கொடுத்து எங்களது போராட்டத்திற்கு உதவி வருகின்றனர். இதில் அரசுக்கு என்ன சிக்கல். எங்கள் மக்களும் எங்களை ஆதரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் முகமை ஒன்று, எங்கள் அமைப்பு கணக்கு வைத்துள்ள வங்கியின் மூலமாக எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் வெளிநாட்டிலிருந்து பெற்ற நன்கொடைகள் தொடர்பான பதிவு விவரங்களை நாங்கள் கொடுக்க வேண்டுமென்றும் இல்லையெனில் அவை திருப்பி அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர் அந்த அமைப்பின் பிரதிநிதிகள்.