நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓபி.ராவத் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவு மிச்சமாகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். தற்போது 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் இது சாத்தியமாகும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
2019, 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த, சில சட்டப் பேரவைகளின் பதவிக்காலத்தை நீட்டித்தல் அல்லது குறைத்தலுக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம் என்று அவர் தெரிவித்தார்.