உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம்பெண் வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்த உத்தரபிரதேச அரசு, நெருக்கடி முற்றியதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதனிடையே வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரருடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இடத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.