வழிப்பறித் திருடனுடனான 15 வயது சிறுமியின் ஆக்ரோஷமான போராட்டம் சிசிடிவி காட்சியாக வெளியாகி, பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
செயின் பறிப்பு, செல்ஃபோன் பறிப்பு போன்ற வழிப்பறிச் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகும்போதெல்லாம், திருடர்களின் துணிகர செயலை பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்குவது இயல்பு. அதே நேரத்தில் அந்த காட்சிகள், இப்படியெல்லாம் கூட நடக்கிறது எனப் புரிந்துகொண்டு விழிப்புணர்வோடு செயல்படவும் உதவுகிறது. ஆனால், பாஞ்சாப் மாநிலத்தை சிறுமி ஒருவர் திருடனை மல்லுக்கட்டி பிடிக்கு காட்சியோ இனி இப்படித்தான் துரிதமாக செயல்படவேண்டும் எனும் எண்ணத்தை விதைக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் டியூஷன் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். தள்ளிவிட்டு தப்பிக்க முயன்ற திருடர்களை தைரியத்துடன் விரட்டிச்சென்று, பைக்கில் பின்புறம் இருந்தவனை கீழே தள்ளி, அந்த சிறுமி மல்லுக்கட்டினார். கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டும் அவனை விடவில்லை, விடாமல் அந்த சிறுமி எதிர்கொண்டார். வழிப்போக்கர்கள் வந்து அந்த திருடனை மடக்கிப் பிடித்தும், சிறுமி விடுவதாக இல்லை. சுலபமான, எளிமையான டார்கெட் என நினைத்து பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே குறிவைக்கும் வழிப்பறிக்காரர்களுக்கு இந்தக் காட்சி இனி, தயக்கத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.