மாடுகள் விற்பனை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு தடை நீடிப்பு
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த இடைக்காலத்தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசுக்கள், காளைகள், கிடாரிகள், கன்றுகள், எருமைகள் மற்றும் ஓட்டகங்களை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி மற்றும் வழக்கறிஞர் ஆசிக் இலாகி பாவா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த மே மாதம் 30ம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தடையை நீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் ஒரு வாரத்திற்கு தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.