இரண்டு கட்டங்களாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு ; அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதென மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் 2027ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும், யூனியன் பிரதேசமான லடாக்கிலும், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகியவற்றின் பனி சூழ்ந்த பகுதிகளிலும், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948இன் படியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990இன் படியும், இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த கணக்கெடுப்பு விவரங்கள், 2028 ஆம் ஆண்டு இறுதியிலோ, 2029 ஆம் ஆண்டு தொடக்கத்திலோ வெளியிடப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது.
பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்! ” என்று பதிவிட்டுள்ளார்.