ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த வாரம் 17 வயது சிறுமியை காரில் 5 பேர் கொண்ட குடும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எம்.எல்.ஏ.வின் மகன் காரில் இருந்ததற்கான ஆதாரம் எனக்கூறி செய்தியாளர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோவை காட்டினார். அத்துடன் எம்எல்ஏ மகனைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் வெளியிட்டவற்றை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 -ஏ பிரிவின் கீழ் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ரகுநந்தன் ராவ் அளித்துள்ள விளக்கத்தில், "நான் வெளியிட்ட அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகம்தான் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தைக் காட்டாமலும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தாமலும்தான் வெளியிட்டேன். இதை ஆதாரமாகவே போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அந்தப் படத்தில் இருக்கும் எம்எல்ஏவின் மகனை ஏன் போலீசார் குற்றவாளியாகக் குறிப்பிடவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்கலாம்: காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் புதிய தீவிரவாத அமைப்பு: திடுக்கிடும் தகவல்