"கார்களைக் குறைக்க வேண்டும்" - அரசிடம் கோரிக்கை வைக்கும் Cars24 CEO.. காரணம் என்ன?
டெல்லியில் வாகனப் போக்குவரத்து காற்று மாசுபாட்டிற்கு 14% முதல் 20% வரை பங்களிக்கிறது. மின்வாகனப் பயன்பாடு குறைவாக உள்ளதால், மின்வாகனக் கொள்கைகளை மாற்றி, சார்ஜிங் கட்டமைப்பை விரிவாக்க வேண்டும் என மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Cars 24 CEO விக்ரம் சோப்ரா, காற்று மாசுபாட்டை குறைக்க வாகனப் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மிக அபாயகரமான காற்று மாசுபாட்டால் டெல்லி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் Cars 24 CEO விக்ரம் சோப்ரா முக்கியமான கருத்தொன்றைத் தெரிவித்திருக்கிறார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) ஒட்டுமொத்த வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை டெல்லியில் உள்ளன. டெல்லியில் உள்ள சுமார் 37% வாகனங்கள் பழைய BS I முதல் BS III வரையிலான காலாவதியான உமிழ்வு விதிகளின்படி இயங்கின்றன. NCRல் சுமார் 2.97 கோடி வாகனங்கள் உள்ளன என்றால் அவற்றில் 1.57 கோடி வாகனங்கள் டெல்லியில் உள்ளன.
டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 7 விழுக்காடு அதிகரிக்கிறது. இதற்கிடையே டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு 14 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை வாகனப் போக்குவரத்து பங்களிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இத்தகைய சூழலில் மின்வாகனப் பயன்பாடு டெல்லியில் மிகக் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு டெல்லியில் 78,114 பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 31,447 மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் 17,942 மின் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை 1,27,099 ஆகும். இதனை எதிர்கொள்ள மின்வாகனக் கொள்கைகளை மறுசீரமைத்து, வாகனங்களின் கண்காணிப்பு அமைப்புகளை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்டது. குளிர் காலத்தில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 350ஐத் தாண்டியுள்ளது. இதனால் மிக அபாயகரமான காற்று மாசால் டெல்லி தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் அலுவலகக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் மின்சார வாகனப் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், சார்ஜிங் கட்டமைப்பை விரிவாக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில்தான் Cars 24 CEO விக்ரம் சோப்ரா முக்கியமான கருத்தொன்றை தெரிவித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இதுதொடர்பாகப் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, "நான் இந்தியாவில் ஒரு ஆட்டோடெக் நிறுவனத்தை நடத்துகிறேன். மக்கள் கார்கள் வாங்கி ஓட்டுவதில்தான் எனது வாழ்வாதாரம் இருக்கிறது. இப்போது நான் அரசிடம் வைக்கும் கோரிக்கை கார்களைக் குறைக்க வேண்டும்.. டீசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். நான் இதை ஒரு CEO ஆக எழுதவில்லை. ஒரு தந்தையாவும் ஒரு மகனாவும் எழுதுகிறேன். வெளியில் விளையாட வேண்டிய எனது ஐந்து வயது குழந்தை 'இன்று ஏன் வானம் இவ்வளவு கருப்பாக இருக்கிறது?' என்று கேட்கிறது. 80 வயதான என் பெற்றோர் கூட வெளியில் ஒரு நிமிடம் கூட நடக்க தயங்குகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட Odd–even விதிகளின் படியும், 2020ஆம் ஆண்டில் லாக்டவுனில் போதும் காற்றின் மாசுபாடு பெருமளவில் குறைந்திருந்தது. பிரச்னைகளையும் தீர்வுகளையும் நாம் அறிந்திருந்தபோதும், சிறிது அசௌகரியம் காரணமாக அதை செயல்படுத்த மறுக்கிறோம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

