உலகம் முழுவதும் பயண நடைமுறைகளை கொரோனா தலைகீழாக மாற்றிவிட்டது. நீண்டு விரியும் சாலைகள் வழியாகச் சென்று வானைத் தொடும் மலைவெளிகள், அழகிய சமவெளிகள், அலையடிக்கும் கடலோரங்கள், நதிகள் என பார்த்து ரசிப்பது யாருக்குத் தான் பிடிக்காது.
இன்றைய நிலையில் , பல மாநிலங்களைக் கடந்து செல்வதற்கு பேருந்துகள், ரயில்கள் தேவையில்லை. கேம்பர் வேன் எனப்படும் சிறிய வேன் பயணங்களுக்கு பெங்களூருவில் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கேரவான் போல அனைத்து வசதிகளும் அதில் உள்ளன. இந்த நோய்த்தொற்று காலகட்டத்தில் மற்றவர்களுடன் தொடர்பில்லாமல் சிக்கமாக சென்றுவர சிறு கேரவான்களையே பயணிகள் விரும்பத் தொடங்கியுள்ளதாக தபெட்டர்இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிய கேரவான்களுக்கு அதிக மதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்றிவருகின்றன.
"கொரோனாவுக்குப் பிறகு பயணங்களை பாதுகாப்புடன் ஏற்பாடு செய்வது பற்றி தீவிரமாக யோசித்தேன். பயணிகள் தயக்கமில்லாமல் பயணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் செயல்படுத்துகிறோம்" என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த பயண நிறுவனத்தின் சஞ்சனா ஹாங்கல்.
ஒரு கேம்பர் வேனில் எட்டு பேர் வசதியாக பயணம் செய்யமுடியும். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கமுடியும். சமையற்கூடம், சமையல் பாத்திரங்கள், டென்ட்டுகள், டேபிள், பார்பெக்யூ செட் அப் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. வாகன ஓட்டுநர், சமையல் மற்றும் தூய்மைப் பணிகளுக்கு இரண்டு முதல் மூன்று பேர் வரை ஊழியர்கள்.
இந்த கேம்பர் வேன் பயணங்களை அக்டோபர் முதல் நவம்பர் வரையில் பதிவு செய்யலாம். அந்த மாதங்களில் ஹிமாச்சல் பிரதேசம் செல்லாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையில் ராஜஸ்தான் மற்றும் கட்ச் போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். இந்தப் பயணங்களில் கொரோனா பரிசோதனைகளுக்குப் பிறகு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதுபோன்ற கேம்பர் வேன் பயணங்கள் பெங்களூருவில் பிரபலமடைந்துவருகின்றன.