துர்நாற்றம் வீசும் காலுறை அணிந்து வந்த பஸ் பயணி கைது
ஹிமாசல்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசும் காலுறையை அணிந்து பேருந்தில் பயணித்த வாலிபரை சக பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஹிமாசல்பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்தில் பிரகாஷ்குமார் என்ற 27 வயது வாலிபர் பயணம் செய்தார். அவர் கால்களில் அணிந்திருந்த காலுறைகள் மிகவும் துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகள் கூறியுள்ளனர். காலுறைகளை தூக்கி வீசுமாறும் கூறியுள்ளனர். இதனால் வாலிபருக்கும், சக பயணிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் இறுதியில் பயணிகள் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.
பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி வாலிபர் பிரகாஷை காவலர்களிடம் பயணிகள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பிரகாஷ் மீது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், பிரகாஷ்குமார் அவரது காலுறைகள் துர்நாற்றம் வீசவில்லை என்று கூறினார்.